بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அன்புள்ள தக்கலை வாழ் சகோதர சகோதரிகளே, மதிப்பிற்குரிய ஊர் பெரியவர்களே, ஆலிம்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பறகாத்துஹூ
இந்த கட்டுரை தங்கள் அனைவரையும் பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடன் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
கீழ்காணும் எனது கட்டுரையிலுள்ள விபரங்கள் யாவும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ அல்லது ஏளனம் செய்ய வேண்டுமென்பதோ நிச்சயமாக எனது எண்ணம் இல்லை. எனது எண்ணங்களை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன் என்பதே நிதர்சனமான உண்மை. என் எண்ணமெல்லாம் தக்கலை வாழ் சகோதரர்களும் இதை ஆதரிக்கும் மற்ற சகோதரர்களும் சிந்தித்து பார்த்து இந்த பாவ செயலிலிருந்து மீள வேண்டும் என்பதே . இஸ்லாத்தின் பெயரால் படு விமரிசையாக நடத்தி வரும் இந்த பாவ செயலை அல்லது பித் அத்தான செயல்களை என்னால் முடிந்த வரையில் தடுப்பது என்கிற நோக்கமே இந்த மின்னஞ்சல். தவறுகளோ, புண்படும்படியான வார்த்தைகளோ, அபிப்பிராயங்களோ இருக்குமானால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து எனது தவறை சுட்டி காட்ட உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஞானப்புகழ்ச்சி - 'வஹ்தத்துல் உஜூது' எனும் ஹிந்துக்களின் நாமகரணத்தை கொண்ட ஷிர்க் பாடல்களா?!
பீரப்பா என்ற பெரியவர் அவ்லியாவா? இல்லையா ? என்பது நமக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பே இல்லை காரணம் இது அல்லாஹ்வுக்கும் பீரப்பா என பெரியவருக்கும் இடையில் உள்ள விஷயம் எனவே பீரப்பா ( மற்றும் பலரையும் ) அவ்லியாதான் என்பதை மனிதர்களால் நிச்சயமாக தீர்மானிக்க முடியாது என்பதில் மார்க்கம் முறையாக அறிந்தவர் களுக்கு கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. பீரப்பா என்கிற பெரியவர் செய்த காரியங்கள் அனைத்தையும் நல்லதா இல்லையா என அல்லாஹ்வே தீர்மானிக்கறவன். எனவே அல்லாஹ்விடத்தில் நாம் அவருக்காக துஆ செய்து கொள்வோம். இந்த தருணத்தில் தக்கலை வாழ் மக்கள் பீரப்பாவின் மேல் கொண்டுள்ள அதீத பக்தியில் பெரும் பொருள்
(சுமார் ஒரு கோடி இருக்கலாம் ) செலவில் பிரம்மாண்டமான தர்ஹா ( அல்லாஹ்வுடைய தொழுகை பள்ளியை விடவும் பெரிதாக தர்ஹா கட்டி APMA ஜமாஅத் மக்களால் அழகு பார்க்கப்படுகிறது), இங்கே ஆண்டுவிழா கொண்டாடி அதிலே அவர் பாடியதாக(?!) சொல்லப்படும் ஞானப்புகழ்ச்சி எனும் ஷிர்கான வரிகள் , மற்றும் ஹிந்து தத்துவங்கள் நிறைந்த பாடல்களை நன்மை கருதி விழா கோலங்களுடன் அரங்கேற்றம் செய்யப்படுகிறது என்பது உண்மையான செய்தியே. பலரும் இந்த பாட்டுக்களை இறைவனை புகழ்ந்து பாடக்கூடிய பாட்டுக்கள்தானே இதிலே என்ன தவறு என பரிதாபமாக கேட்கிறார்கள். இவர்களுக்காக ஒரு உதாரணத்தை சொல்லிக் கொண்டு என்னுடைய கட்டுரையின் முக்கியமான பகுதிக்கு செல்கிறேன் .
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி விஷம் கலந்திருக்கிறது என நாம் அறிந்தால் நிச்சயமாக அதை குடிக்க துணியவே மாட்டோம் காரணம் உயிர் போய்விடும் என்கிற பயம்தான்.அதே சமயத்தில் நன்மை என்கிற செயலில் அதாவது ஞானப்புகழ்ச்சி பாடலில் ஷிர்க் மற்றும் மாற்று மதக் கோட்பாடுகள் கலந்திருக்கிறது என்பதை அறிய நேர்ந்தால் உண்மையான முஸ்லிமால் இந்த பாடலை நன்மை என கருதி செய்ய முடியுமா? முடியாது ஆனாலும் பலரும் இந்த செயலை செய்ய துணிந்துவிடுகிறார்கள் என்பதே இன்றுவரை உண்மையாக இருக்கிறது காரணம் அங்கே விஷத்தால் உடன் பலன் அறியப்படுகிறது அதனால் யாரும் துணிவதில்லை ஆனால் இங்கே ஞானப்புகழ்ச்சி பாடலின் கூலி அதாவது பலன் உடன் கிடைப்பதில்லை , மறுமையில்தான் அறியப்படும் என்பதால் பயமில்லாமல் பலரும் துணிந்து விடுகிறார்கள். உண்மையிலேயே மறுமை பயம் இருந்திருந்தால் நிச்சயமாக சிந்தித்து பார்த்து தன்னுடைய செயலை சரி செய்து கொள் வார்கள் என்பதும் நிதர்சனமே. இந்த மனநிலையில் இனி ஞானப்புகழ்ச்சி பாடலை சிறிது ஆலசி ஆராய்ந்து பார்ப்போம்.
நமது தக்கலை ஊரில் பீரப்பா அவ்லியா (?!) என்று சொல்லகூடிய இஸ்லாமியப் பெரியவர் எழுதியதாக (?) சொல்லப்படும் ஞானப்புகழ்ச்சி எனும் பக்தி(?!)பாடலை புனிதமாக கருதி பக்தியுடன்(?!) பாடுவதற்குரிய ஏற்பாட்டை வருடா வருடம் பீரப்பா அவ்லியாவுக்கு (?!) விழாக் கோலம் எடுத்து மாற்று மதத்தவர்களை மாதிரி ஆண்டு விழா, திருவிழா என தக்கலை APMA ஜமாஅத் நிர்வாகம் மக்களின் ஆதரவோடு (?!) வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. இதோ இந்த வருடமும் 2011, ஜூன் 16 ல் இந்த திருவிழா(?!) கோலத்தை நடத்த விளம்பர நோட்டீஸ்கள் ,போஸ்டர்கள் சகிதம் தக்கலை ஊர் APMA ஜமாஅத் தயாராகி விட்டது
மாற்று மத திருவிழாக்களில் கொடியேற்றத்துடன் தொடங்கும் கோயில் கொடை விழாக்களை போலவே இங்கே தக்கலை பீரப்பா தர்ஹாவிலும் ஜூன் 3 ம் தேதி கொடியேற்றத்துடன் (?!) திருவிழா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. பீரப்பாவின் புகழ் திக்கெல்லாம் பரவ ஆலிம்கள்(?!) என்று சொல்லப்படுகிறவர்கள் " பீர் முஹம்மது அப்பா - சுடர் விரிக்கும் சூரியன் " மற்றும் " பீர் முஹம்மது அப்பா சுகம் தரும் சந்திரன் எனும் தலைப்புகளில் 13.06.11 அன்று கருத்தரங்கம் (?!) ஜமாத் தலைவர் தலைமையில் நடத்தவும் இருக்கிறார்கள். பீரப்பாவின் மீதுள்ள தக்கலை வாழ் மக்களின் பாசத்தை, நேசத்தை சுடர் விரிக்கும் சூரியன் , சுகம் தரும் சந்திரன் என்று எப்படியெல்லாம் வர்ணனை செய்து, கற்பனை செய்து அதாவது மனிதனை சூரியனுக்கும் சந்திரனுக்கும் அல்லாஹ் அருளிய அதனுடைய அளப்பரிய செயல்பாட்டிற்கும் ஒப்பிட்டு பேசுவது மகா பெரிய ஷிர்க் என்பதை படித்த பேராசிரியர்களாலும், படித்த ஆலிம்களாலும் உணர்ந்து கொள்ள முடியாமற் போனது வேதனையிலும் வேதனையே ஷிர்க்கை அறியாமையில் மகா பாவத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள் என்பதை எண்ணும் போது பீரப்பா அவ்லியா பாசம் இந்த மக்களின் இஸ்லாமிய அடிப்படை கோட்பாடு தகர்ந்து விடுகிறது என்பது உண்மை
ஊருக்கு ஒரு தெய்வம் , குடும்பத்திற்கொரு குலதெய்வம் என மாற்று மத மக்கள் வசிக்கும் கிராமங்களில் நாம் காண முடியும் மேலும் அந்தந்த ஊர்களிலுள்ள கோயில்களுக்கு ஆண்டுக் கொடை திருவிழா கொடியேற்றத்துடன், பலியுடன், விளம்பர போஸ்டர்களில் அருள் பெற வாருங்கள் அழைப்பு சகிதம் விமரிசையாக நடத்துவார்கள் இதுபலவே நம் முஸ்லிம் மக்கள் வாழும் பெரும்பாலான ஊர்களில் ஏறக்குறைய ஒவ்வொரு ஜமாஅத்திலும் ஒவ்வொரு அவ்லியாக்கள் (?!) இருக்கிறார்கள் கோயில் கொடை போல இங்கேயும் ஆண்டுத் திருவிழாக்கள் பலியுடன், விளம்பர போஸ்டர்களில் ( 2010 ல் )எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து அருள் பெற வாருங்கள் ( 2011 ல் அருள் பெற என்பதை மாற்றி கலந்து சிறப்பிக்க என்று திருத்தப்பட்டுள்ளது) அழைப்பு சகிதம் விமரிசையாக நடத்துவார்கள். இதற்கு நமது தக்கலை APMA ஜமாஅத் ஒரு உதாரணம் சந்தேகமிருந்தால் இந்த வருட ஆண்டுத் திருவிழா(கிட்டதட்ட கோயில் கொடை விழா மாதிரி ) அழைப்பிதழை பாருங்கள். இதில் மிக முக்கியமாக 3 ம் சியாரத் என்று ஒரு நிகழ்ச்சி அதாவது ஒருவரின் இறந்த மூன்றாவது நாளை 3 ம் பாத்திஹா என்று இறந்தவருக்கு ஓதி நேர்ச்சையும் (?!) , சாப்பாடு கொடுப்பது தக்கலை ஊர் உள்பட பல ஊர்களில் காணப்படும் இஸ்லாம் சொல்லி தராத ஒரு மாற்று மத சம்பிரதாயம். இதே செயலைத்தான் இங்கே பீரப்பாவுக்கு செய்கிறார்கள் பீரப்பா இறந்த நாளை ஆண்டு விழாவாகவும் (?!), பின்னர் என்றோ இறந்த பீரப்பாவுக்கு வருடா வருடம் 3 ம் ஸியாரத், 10 ம் ஸியாரத், 40 ம் ஸியாரத் என்றும் இதில் 3 ம் சியாரத்தை சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் மவுத்தானால் தான் 3 ம் சியாரத் என்கிற சடங்கு வழக்கமாக (?!) செய்யப்படும், பின்னர் அடுத்தடுத்த வருடங்களில் அதே நபருக்கு இந்த சடங்கு மீண்டும் நடக்காது , வழக்கமும் இல்லை எந்த ஷரீயத் (?!) சட்டத்தில் உள்ளது என்பது செய்பவர்களுக்கே வெளிச்சம். ஆனால் இங்கே தக்கலையில் இப்படி விழா கொண்டாடுவதற்கு (?!) ஏற்ற மாதிரி பீரப்பா வருடா வருடம் மவுத்தாகிறாரா ? இது அறிவுக்கு பொருந்தும் செயலா? இது எந்த வகை இஸ்லாம் என தெரிய வில்லை , நமது அறிவுகேற்ற மார்க்கமான இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா ? இத்தனை வழிகேடுகளையும் தக்கலை APMA ஜமாஅத் ஆலிம் (?!) முன்னின்று நடத்துகிறா?. அருமை சகோதர சகோதரிகளே தயவு செய்து அல்லாஹ்வுக்காக வாவது கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள். எப்படிப்பட்ட வழிகேட்டில் நமது செயல்கள் இருக்கிறது என்பதனை நடுநிலையுடன் எண்ணிப்பாருங்கள்..
பீரப்பா அவ்லியாவின் (?!) இறந்த நாளை மாற்று மதத்தவர்களை மாதிரி ஆண்டு விழா, திருவிழா என விழாக் கோலம் எடுத்து நடத்தப்பட்டு இந்த ஆண்டுப்பெருவிழா கொண்டாட்டத்தின் இறுதி நாளன்று இவரின் கபர் முன்னால் ஹிந்து கலாச்சார இத்தியாதிகளுடன் பக்தியுடன் அமர்ந்து ஞானப்புகழ்ச்சி என்ற பாடல் தொகுப்பை விடிய விடிய பல விதமான ஏற்ற இறக்க ராகங்களுடன் நன்மை (?!) கருதி பாடப்படும். இப்படி பாடப்படும் பாடல்களில் உள்ள வரிகள் ஹிந்து மத கொள்கையான 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே - அதாவது எல்லாம் கடவுள்தான் ) எனும் ஹிந்துக்களின் நாமகரணத்தை தெளிவாக சொல்கிறது..
சிலர் இந்த ஞானப்புகழ்ச்சி புத்தகத்தை உறங்க செல்வதற்கு முன்னால் மூன்று தடவை முகத்தில் ஒத்தி பின்னர் பக்தியுடன் முத்தமிட்டு பின்னர் படுக்கைக்கு செல்வதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையான செய்தி. இதை நாம் அறியும் போது உண்மையான எந்த ஒரு முஸ்லிமும் ஆச்சரியத்தில் வருத்தப்படாமல் இருக்க முடியாது... இப்படிப்பட்ட இந்த புனித (?!) புத்தகத்தில் என்னென்ன வரிகள் ஹிந்துக்களின் கலாசாரத்தை சார்ந்து அல்லது ஹிந்துக்களின் மத சாயலில் இருக்கிறது என்பதை பாப்போம். பீரப்பா பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமலே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்வக் கோளாறில் பல சகோதரர்களும் இந்த பீரப்பா பாடல்களை(?!)மூன்று நான்கு குருமார்களிடம் மாறி மாறி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே அல்லாஹ்விடத்தில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்திலும் , பீரப்பாவை கவ்ரவப்படுத்தும்(?!) நோக்கத்திலும் பஹ்ரைனில் உள்ள தக்கலை வாழ் மக்கள் நடத்தும் இந்த பாட்டு பாடும் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு இதே ஞானப்பாடல்களை ஹய் பிச்சில் உச்சஸ்தாயில் பாடியும் இருக்கிறார்கள் . பாட்டு பாடி முடிந்ததும் புனித (?!) நேர்ச்சையும் விநியோகிக்கப்படும் அஸ்தஃபிருல்லாஹ்..... இந்த பாவமான செயலிலிருந்து அல்லாஹ் பலரையும் மாற்றி விட்டான் ... அல்ஹம்துலில்லாஹ் .....அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
நான்கு குருமார்களிடம் ஞானப்புகழ்ச்சி பயின்ற பல தக்கலை வாழ் பல அன்பர்கள் இதே முக்கியத் துவத்தை அல்லாஹ் வுடைய குர்ஆனை முறையாக தஜ்வீதுடன் ( தஜ்வீது என்றால் என்ன என்றே தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) ஒதுவதற்கோ மற்றும் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கான முயற்ச்சிகள் செய்தோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பது அப்பட்டமான உண்மை செய்தியே. அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி , மேலும் திக்கி திக்கி ஓதினால் அந்த முயச்சிக்காக அல்லாஹ் பல நன்மைகள் அள்ளித் தருகிறான் ஆனால் சகோதர சகோதரிகளே நன்றாக யோசித்து பாருங்கள்.... பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சியை படித்தால் என்ன நன்மை ? நன்மைக்கான அல்லாஹ்வுடைய உத்தரவாதம் எங்கே ? நாமாகவே நன்மை என நினைத்து பாடிக் கொண்டிருக்கிறோமே ! இது சரியான செயல்தானா ? உங்கள் மன சாட்சிப்படி அல்லாஹ் வுக்கு பயந்தது எதை நாம் முன்னிரிமை படுத்தியிருக்கிறோம், நமது தக்கலை சமுதாய மக்கள் குர்ஆன், ஹதீஸ்களிலே எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை சற்று சீரியசாவே நடுநிலையுடன் சிந்தனை செய்து பாருங்கள், நீங்களே உண்மையை நிச்சயமாக உணருவீர்கள் அஸ்தஃபிருல்லாஹ்
இந்த நிலைக்கு யார்காரணம் ? எது காரணம் ? என்பதை நம்மால் பட்டவர்த்தனமாக அறிந்து கொள்ள முடியும் ஆதலால் சகோதர சகோதரிகளே அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும் என இந்த சந்தர்ப்பத்திலாவது நமது செயலுக்காக அல்லாஹ் விடம் மன்னிப்பு கேட்டு துஆ செய்து கொள்வதோடு முறையாக இஸ்லாமை உரிய முறையில் தெரிந்து கொள்வதற்கும் நாம் நிச்சயமாக முயற்ச்சி செய்து மறுமையின் பலனை அடைந்து கொள்வோம்
என்னைப் போலவே இந்த புனித(?!) பாடலை படிக்கும் பல சகோதரர்களுக்கும் அர்த்தங்கள் தெரியாது. பலரிடமும் இது பற்றி விசாரித்தேன் எல்லோருமே இது அல்லாஹ்வை புகழ்ந்து பாடக்கூடிய பாட்டுதானே என பரிதாபகமாக சொல்லிக் கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். உண்மையிலேயே பரிதாபம்தான் காரணம் அர்த்தங்களை யாருமே பார்ப்பதில்லை , தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பதும் இல்லை. மக்கள் ஒருவித பக்தி மயக்கத்தில் தன்னை மறந்து ராகத்தில் மூழ்கிவிடு வதுண்டு அதாவது பக்தி ராகம் வந்தாலே ஒருவித பரவச நிலை வந்துவிடுவது இயற்கையே – இத்தகைய பாடலை படிக்கும் பக்தி நிலைகளை ஹிந்துக் கோயில்களிலும், கிறிஸ்த்தவ சர்ச்சுகளிலும் சர்வ சாதாரணமாக நாம் காணலாம் ஒரே ஒரு வித்தியாசம் அங்கே இசைக் கருவிகளுடன் பாடல்கள் இங்கே இசைக்கருவிகள், பக்க வாத்தியங்கள் இல்லாத பாடல்களில் தக்கலை சகோதரர்கள் மூழ்கி பாடுகிற சூழ்நிலைதான் என்னால் உணர முடிகிறது. இந்த நிலையை , இந்த பாவ செயலின் யதார்த்தத்தை, தக்கலை சகோதரர்களிடம் எடுத்து சொல்லி சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்த மின்னஞ்சல் கட்டுரை..
Contd....... Part 2
No comments:
Post a Comment